தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் கனமழையால் மக்கள் சிரமப்படாமல் இருக்க மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

முத்துகிருஷ்ணா நகர், அன்னை தெரசா நகர், கதிர்வேல் நகர் போன்ற பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வடிகால் வழியாகவும் மின் மோட்டர் அறைகள் மூலமாகவும் சரியான முறையில் வெளியேறுகின்றதா என்பதை அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேவையான பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

புறநகர் பகுதிகளில் இருந்து வெள்ளநீர் நகருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புறம் அமைந்துள்ள ஓடையைப் பார்வையிட்டு நீர் ஓட்ட நிலைமையை மதிப்பீடு செய்தார். “புறநகரிலிருந்து எந்த உபரி நீரும் நகருக்குள் வரவில்லை; நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது” எனவும் தெரிவித்தார்.

நகரின் பல பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் விரைவாக அகற்றப்பட்டு வருவதற்காக மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். மழை தொடர்பான எந்த பிரச்சினைக்கும் மக்கள் 1800 203 0401 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, நகர மக்கள் நிம்மதியாக உறங்கிய நேரத்தில், “எவ்வளவு மழை பெய்தாலும் தூத்துக்குடியில் நீர் தேங்க விடமாட்டோம்” என்ற உறுதியுடன் மேயர் ஜெகன் பெரியசாமி இரவும் பகலும் தளத்தில் செயல்பட்டு வந்தார்.

மக்களை பாதுகாப்பதில் அயராது உழைக்கும் மேயரின் முயற்சிகள் நகரமக்களிடையே பெரிய பாராட்டைப் பெற்றுள்ளன.