தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் அமைந்துள்ள 28 ஏக்கர் மாநகராட்சி குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிக்கும் ‘பயோமைனிங்’ திட்டத்தில் கோடிக்கணக்கில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் வெளிச்சம் பெற்றுள்ளன.

2018 ஆம் ஆண்டு 2.30 லட்சம் கன மீட்டர் குப்பையை பயோமைனிங் முறையில் அகற்ற ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், ஆரம்ப நிறுவனமொன்று 40,115 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றியது.

அதனைத் தொடர்ந்து 2022 ஆகஸ்டில் புதிய நிறுவனத்துக்கு 1.56 லட்சம் கன மீட்டர் குப்பை பிரிப்பதற்காக 10.60 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது. ஆனால் இந்நிறுவனம் வெறும் 5,000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றியிருந்தும் முழுத் தொகையான 10.60 கோடி ரூபாய் பிலையும் பெற்றது. இதற்காக பயன்படுத்திய மின்சாரம் 8,328 யூனிட் மட்டுமே என பதிவுகளில் உள்ளது.

இந்த கடும் வேறுபாடுகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் தாக்கல் செய்த மனுவின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை தொடங்கினர். விசாரணை நடைபெறும் நிலையில், நவம்பர் 20 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் குப்பை கிடங்கு செயல்பாடுகள் தொடர்பான பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வழக்குப் பதிவு தாமதத்தை நீதிபதி கேள்விகேட்டதைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் கமிஷனர் மற்றும் தற்போதைய தூத்துக்குடி உதவி ஆணையர் சரவணகுமார் (48), ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன் (62), மாற்றுப்பணியில் உள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன் (49), ஒப்பந்ததாரர் மணிசேகரன் (37) ஆகிய நான்கு பேர்மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

விசாரணையில், மாநகராட்சி ஒப்பந்தப் பதிவேட்டில் பதிவு செய்யாத தனியார் நிறுவனத்திற்கு விதிமீறி பணி உத்தரவு வழங்கப்பட்டதும், குப்பை ஆய்வறிக்கைக்காக நியமிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக எக்யூஏ குழுவை பணியில் ஈடுபட அனுமதிக்காததும் வெளிப்பட்டுள்ளது.

மேலும், குப்பை கிடங்கில் இருந்த குப்பைகளை அகற்றாமல் இருந்தபோதும், அவை அகற்றப்பட்டதாக போலி பதிவுகள் அளவு புத்தகங்களில் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு 9.57 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூரை அதிரவைத்துள்ள இந்த பயோமைனிங் முறைகேடு வழக்கு தற்போது தீவிர விசாரணையில் உள்ளது.