கரூரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் நல இயக்கத்தின் மாநிலத் தலைவர் சாமு காந்தி, உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியும், சிகிச்சையில் உள்ளவர்கள் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டியும் தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உடனடியாக ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தை வலியுறுத்தியுள்ளார்.

இன்று கரூருக்கு வந்து, உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்த உள்ள தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பிரிவு (CISF / SPG) முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு, இனிமேல் தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து பொதுக்கூட்டங்களுக்கும் மத்திய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கரூரில் நிகழ்ந்த துயரமான கூட்ட நெரிசல் விபத்துக்கான காரணங்களைத் தெளிவுபடுத்த, உயர் நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும் என்றும், மத்திய அரசின் விசாரணை அமைப்பு மட்டுமே மக்களுக்கு உண்மையான நியாயத்தை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.

வருங்காலங்களில் இதுபோன்ற பேரழிவுகள் நடைபெறாமல் தடுக்க, மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, எந்தவித அபாயமும் இல்லாத இடங்களில் மட்டுமே பொதுக்கூட்டங்களுக்கும் ஊர்வலங்களுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் சார்பாக சாமு காந்தி வலியுறுத்தினார்.