தூத்துக்குடி–திருநெல்வேலி பைபாஸ் சாலையில் செயல்படும் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த விலையை மீறி அதிகமாக வசூலித்தது குறித்து கேள்வி எழுப்பிய நியூஸ் எக்ஸ்பிரஸ் பதிப்பு மாவட்ட செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் மாவட்டத்தை அதிரவைத்துள்ளது.

அதிக விலை வசூல் குறித்து விளக்கம் கேட்ட செய்தியாளரின் செல்போனும் கை கடிகாரமும் குண்டர்களால் பறிக்கப்பட்டதுடன், அவர்மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது ஊடக உலகை பெரும் சோகத்திற்கும் அதிருப்திக்கும் உள்ளாக்கியுள்ளது.

பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குறித்து மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் உடனடி தலையீடு செய்ய வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஊழலையும் சட்ட விரோதங்களையும் வெளிச்சம் பார்க்கச் செய்யும் பத்திரிக்கையாளர்களை துன்புறுத்துவது ஜனநாயகத்தையே தாக்குவது என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குண்டர்களை உடனடியாக கைது செய்து, தேவையானால் குண்டர்த்தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சங்கமும் தீவிரமாக கோரிக்கை விடுத்துள்ளது.

சம்பவம் ஊடகத்துறைக்கு எதிரான அச்சுறுத்தல்களை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் மீது காவல் துறை விரைவான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென மாவட்டம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.