தூத்துக்குடியில் ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் சிக்கிய பசு மற்றும் கன்றினை துரிதமான செயல்பாடால் உயிருடன் மீட்ட தலைமை காவலரின் மனிதாபிமான செயல் பாராட்டை பெற்றுள்ளது.

கடந்த 7ம் தேதி மாலை தூத்துக்குடி இரண்டாம் ரயில்வே கேட்டில் ரயில் இன்ஜின் வருவதற்காக கேட் மூடப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பசு மற்றும் அதன் குட்டி திடீரென தண்டவாளத்தில் நுழைந்து கேட்டிற்குள் நின்றன. அச்சமயம் அங்கிருந்த போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் சுப்பையா திடீர் அபாயத்தை உணர்ந்து, ரயில் வருவதற்கு முன் பசுவையும் கன்றையும் பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி வைத்தார். இதனால் இரண்டு உயிர்களும் பத்திரமாக மீட்கப்பட்டன.

சுப்பையாவின் வேகமான மற்றும் மனிதாபிமானமான செயலை அப்பகுதி மக்கள் பாராட்டினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று தலைமை காவலர் சுப்பையாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர்.

இச்சம்பவம் “உயிர் முக்கியம்” என்ற உணர்வை மீண்டும் வெளிப்படுத்தி, காவல்துறையின் மனிதநேய முகத்தையும் பொதுமக்கள் மத்தியில் உயர்த்தியுள்ளது.