தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிராமத்தில் வீடு இல்லாத புறம்போக்கு நிலங்களுக்கு போலியாக கதவு எண்கள் வழங்கி, அதை அடிப்படையாகக் கொண்டு பிறரின் நிலங்களில் உரிமை கோரும் மோசடி நடைபெறுவதாக இந்து மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வீரமுருகன் மனுநீதிநாளில் புகார் தெரிவித்துள்ளார்.

1846/2023 ஆவண எண்ணில் எனக்குரிய நிலத்தில், 5/591-2 என்ற போலியான கதவு எண் கொண்டு ஒருவர் உரிமை கோருவதாகவும், ‘ஜோதி’, ‘பொன்ராஜ்’ என்ற பெயரில் போலி வரிவிதிப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும் ஆய்வு நடைபெறாதது நிர்வாக அலட்சியமாகும் என அவர் கண்டித்துள்ளார். போலியான வரிவிதிப்புகள் சண்டை, மோதல், உயிர்ப்பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை W.P (MD) 32074/2025 வழக்கில் போலி தீர்வைகளை மூன்று வாரங்களில் ரத்து செய்ய உத்தரவிட்டிருந்தும், செயல்பாடு இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசடியில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், ஊராட்சி உதவி இயக்குநர் ஆகியோர் தலையீடு செய்ய வேண்டும் என வீரமுருகன் கோரிக்கை வைத்துள்ளார்.