தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் வைத்து பாஜக மகளிரணி மாநில தலைவர் உமா ரதிராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சேவை, நல்லாட்சி என்ற வகையில் சாமானிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாரதி ஜனதா கட்சி மகளிர் அணி மாநில தலைவர் உமா ரதிராஜன் கூறியுள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்று 11 ஆண்டுகள் முடிவடைந்து 12 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது 11 ஆண்டுகால சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறினார்.

பாஜக அரசு பொறுப்பேற்ற 11 ஆண்டுகளில் சேவை, நல்லாட்சி என்ற வகையில்  சாமானிய மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்திய எல்லை பாதுகாப்பாக உள்ளது. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு வர இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளார்.

கரிப் கல்யான் திட்டத்தின் கீழ் 81 கோடி பயனாளிகள் இலவசமாக அரிசியை பெற்று வருகின்றனர். பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் நான்கு கோடிக்கு அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடு திட்டத்தில் 13 கோடிக்கு அதிகமான மக்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் காப்பீடு திட்டத்தில் 51 கோடிக்கு அதிகமான மக்களுக்கு காப்பீடு திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 68 லட்சத்திற்கும் அதிகமான தெருவோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மூன்று கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசு முனைப்பு காட்டுவதில்லை, விவசாய பயிர் பாதுகாப்பிற்காக பயிர் காப்பீட்டு திட்டத்தில் 1.75 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் தேவை என்ற அடிப்படையில் நடுத்தர வர்கத்தினுடைய முக்கியத்துவத்திற்காக 12 லட்சம் வரை வருமான வரி விலக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின் திட்டத்தில் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படுகிறது. 32 லட்சம் பேருக்கு 52 கோடி கடன் முத்ரா திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலமாக உலகத்தரமான கல்வி வழங்குவதற்காக 15 எய்ம்ஸ் மருத்துவமனை, 420 பல்கலைக்கழகங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. பி.எம்.சி திட்டத்தில் 16,000 பள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 1.6 லட்சம் நிறுவனங்கள் மூலமாக 17 புள்ளி 6 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் நல மருந்தகங்கள் ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்து வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 70 வயதிற்கு அதிகமானவர்களுக்கு முழு இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் தமிழகத்தில் எந்த மருத்துவமனையிலும் இதற்கான சிகிச்சை வழங்கப்படுவதில்லை, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால்தான் மத்திய அரசு வழங்கும் அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும். பெண்களுக்கு போஷன் அபியான் திட்டத்தில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகிறது. அங்கன்வாடியில் படிக்கக்கூடிய குழந்தைகளுக்கு போஷன் அபியான் திட்டத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுகிறது. இந்திரா தனுஷ் திட்டத்தில் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாகவும், அனைத்து தரப்பு மக்களின் நலனுக்கான அரசாகவும் உள்ளது என்றார்.


கடந்த 11 ஆண்டுகளில் நாம் உலக பொருளாதாரத்தில் நான்காவது இடத்தை பெரும் அளவிற்கு முன்னேறி உள்ளோம். வந்தே பாரத் ரயில், விமான நிலையம், செனாப் பாலம் என சாத்தியம் இல்லை என்று சொல்லக்கூடிய இடங்களில் பல விஷயங்களை மத்திய பாஜக அரசு சாதித்து காட்டியுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த 136 வந்தே பாரத் ரயில்கள் கொடுக்கப்பட்டுள்ளது 11 ஆண்டுகளில் சேவை நல்லாட்சி என்ற அடிப்படையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு பெயர் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி செயல்படுத்தி வருகிறது.

விஸ்வகர்மா தொழில் திட்டத்தை கொண்டு வந்த போது அதனை செயல்படுத்த விடாமல் கலைஞர் கைவினை திட்டம் என்று பெயரை மாற்றிய தமிழக அரசு அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளது என்றார். இதுவரை மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு முழுமையாக பயன்படுத்தவில்லை, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிவறை வசதி இல்லாத பள்ளிக்கூடங்கள்
தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத பல பள்ளிகள் தமிழகத்தில் உள்ளது. மத்திய அரசு உள் கட்டமைப்புகளுக்கு என கொடுத்த பணத்தை எல்லாம் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளது.


தமிழகத்தில் யார் அந்த சார் என்பதற்கு பதில் தெரியவில்லை, தமிழகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு பெண்கள் ஆளாகும்  சம்பவம் தொடருகிறது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து தண்டனை கொடுக்காத வரை இது போன்ற சம்பவங்கள் தொடரும். தனியார் தங்கும் விடுதியில் 13 வயது சிறுமிக்கு நடந்த பாலியலில் விடுதிக் காப்பாளருக்கு தமிழக சமூக நலத்துறை அமைச்சர் வக்காலத்து வாங்குவது கண்டனத்திற்குரியது.

பிஜேபி ஆளாத மாநிலத்தில்  மத்திய அரசின் திட்டங்களை அதிக அளவில் பெறக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அவர் கூறினார். தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு அதனை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றார். பேட்டியின் போது பாஜக தூத்துக்குடி மாவட்ட தலைவர்கள் சித்ராங்கதன், சரவணா கிருஷ்ணன், ஓ.பி.சி அணி மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.