தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் சிறப்பு முகாம் மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்டது.

மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார். இதில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கி வைத்து, வங்கி கடன் வழங்கும் திட்டத்தை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

மேயர் தனது உரையில்,
“மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை திட்டம் துவங்கியது. அப்போது 50 அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டன. ஆனால் தற்போது 9,997 வியாபாரிகள் கணக்கெடுக்கப்பட்டு வங்கி கடன் பெற்றுள்ளனர். முதலில் 6,325 பேருக்கு, பின்னர் 3,267 பேருக்கு, மூன்றாவது கட்டமாக 406 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்தத் திட்டத்தை துவக்கி வைத்து, 1,862 அடையாள அட்டைகளை வழங்கினார். தற்போது மேலும் 4,463 அட்டைகள் தயாராகி வருகின்றன, விரைவில் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.

மேலும் அவர்,
“மீன் வியாபாரிகள் முதல் பூவியாபாரிகள் வரை அனைவருக்கும் இந்தக் கடன் திட்டம் பயன்படுகிறது. பத்தாயிரம் ரூபாய் கடனுக்கு ரூ.2,500 மானியம் வழங்கப்படுகிறது. வங்கிகள் நேரடியாக கடன் வழங்குவதில்லை, மாநகராட்சி வழங்கும் அடையாள அட்டைதான் அவர்களுக்கு நம்பிக்கையாக உள்ளது. சாலையோர வியாபாரிகள் இதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கேரி பை முறையை 80% ஒழித்துவிட்டோம், இனி முழுமையாக அகற்றுவோம். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், வியாபாரிகள் வியாபாரம் செய்ய மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உறுதியாக செயல்படுகிறது,” என்றும் வலியுறுத்தினார்.

இந்த முகாம் தொடர்ந்து ஒரு வாரம் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, நகரமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர் காந்திமதி, முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ் தங்கம், கவுன்சிலர்கள் கனகராஜ், ரெக்ஸ்லின், திமுக மாவட்ட மற்றும் வட்டச் செயலாளர்கள், பிரதிநிதிகள், மாநகராட்சி அதிகாரிகள், வங்கி அலுவலர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.