மூத்த குடிமக்களின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் சுயாதீனத்தை வளர்க்கும் நோக்கில், சகா கலைக்குழு சார்பில் “தாத்தா–பாட்டி கலைக்குழு” என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் 50 வயதிலிருந்து 100 வயதிற்கு மேற்பட்ட தாத்தா–பாட்டிகள் யாராக இருந்தாலும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஊதியம் பெறும் அரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சகா கலைக்குழு நடத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில், ஆர்வமுள்ள தாத்தா–பாட்டிகள் குடையை கையில் பிடித்து ஆடும் ஆட்டம், கும்பி ஆட்டம், கும்பி பாட்டு உள்ளிட்ட பாரம்பரிய கலை வடிவங்களில் பங்கேற்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதன் மூலம் அவர்கள் தங்களுக்கான வருமானத்தை ஈட்டிக் கொண்டு, தினசரி தேவைகள் மற்றும் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட அவசியங்களை பிறரிடம் கையேந்தாமல் தாங்களே நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

மூத்த குடிமக்களின் சூழ்நிலையை உணர்ந்து, அவர்களின் திறமைக்கும் அனுபவத்துக்கும் மதிப்பளிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக சகா கலைக்குழு தெரிவித்துள்ளது. வயது ஒரு தடையல்ல, அனுபவமே பலம் என்ற சிந்தனையை சமூகத்திற்கு எடுத்துச் சொல்லும் இந்த முயற்சி, தாத்தா–பாட்டிகளுக்கு புதிய உற்சாகத்தையும் வாழ்வாதாரத்தையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாத்தா–பாட்டிகள் மீது அக்கறை கொண்டு இந்த மனிதநேய முயற்சியை உருவாக்கியவர், சகா கலைக்குழு நிறுவனர் முனைவர் சகா மா. சங்கர். இதன் மூலம் மூத்த குடிமக்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, பொருளாதார ரீதியாகவும் மனநல ரீதியாகவும் வலிமை பெற வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆர்வமுள்ள தாத்தா–பாட்டிகள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ள முன்வர வேண்டும் என சகா மா. சங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புக்கு : 9944662279