டிட்வா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவும் கருணையின் கையை தூத்துக்குடி நகரம் நீட்டியுள்ளது. சென்னை துறைமுகத்திலிருந்து முதல்கட்டமாக நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வ.உ.சி. துறைமுகத்திலிருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான LCU 51, 54, 57 ஆகிய மூன்று கப்பல்களில் சுமார் 300 டன் நிவாரணப் பொருட்கள் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.

நிவாரண கப்பல்களின் புறப்பாட்டு நிகழ்வு உற்சாகமாக நடைபெற்றது. பின்னர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் ஒவ்வொரு கப்பலையும் சுற்றிப்பார்த்து ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாக மொத்தம் ரூ. 7,65,06,500 மதிப்பிலான, 945 மெட்ரிக் டன் எடையுடைய நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தார். இதில் பருப்பு வகைகள், சீனி, பால் பவுடர், சேலைகள், வேட்டிகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள், தார்பாய்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கின.

கப்பலின் முன்பகுதியில் இலங்கை மற்றும் இந்தியக் கொடிகள் ஒன்றோடொன்று பறக்க, பின்பகுதியில் இந்தியக் கொடி உயரமாகப் பறந்தது. கொடியசைக்கும் நிகழ்வுடன் கப்பலின் சைரன் ஒலித்தபோது துறைமுகம் முழுவதும் உதவி மற்றும் மனிதநேயத்தின் பெருமிதம் ஒலித்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, கோட்டாட்சியர் பிரபு, வ.உ.சி. துறைமுக போக்குவரத்து மேலாளர் விமல், கடற்படை அதிகாரி அனில்குமார், தாசில்தார் திருமணி ஸ்டாலின், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், நிர்மல்ராஜ், மேகநாதன், மண்டல தலைவர் பாலகுருசுவாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மேலும் மாவட்ட, நகர, பகுதி திமுக அணி பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மீனவரணி உள்ளிட்ட பல்வேறு பிரிவு அமைப்பினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.

மனிதநேயத்தின் அலை இந்தியக் கடற்படை கப்பல்களின் வழியாக இலங்கைக்கு சென்ற இந்த வரலாற்று நிகழ்வு, தூத்துக்குடி துறைமுகத்தில் மறக்க முடியாத நாளாக அமைந்தது.