தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகே பனை மரத்தில் ஏறி பதநீர் எடுக்க முயன்றபோது, பனைத் தொழிலாளி தவறி விழுந்து  பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி அருகில் உள்ள வடக்குசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (62) பனைத் தொழில் செய்து வருகிறார்.

நேற்று காலை அங்குள்ள தோட்டத்தில் உள்ள பனை மரத்தில் ஏறி பதநீர் இறக்கும்போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து பரிதாபமாக பலியானார். இது குறித்து  பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது

பனைத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் என்பது மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளது. பனைத் தொழிலாளர்களின் நலன் காக்கும் வகையில்  ஒரு சிறப்பு திட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும். தூத்துக்குடி அருகே உள்ள சூரங்குடியைச் சேர்ந்த  பனைத் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தனது வயதான காலத்தையும் பொருட்படுத்தாமல் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்திற்காக பனைத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் பனைத் தொழிலாளி பதநீர் எடுக்க மரத்தில் ஏறும்போது தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.

பனைத் தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். எனவும் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும்  பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது அறிக்கை மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.