தூத்துக்குடி மாநகராட்சி பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப பல்வேறு சாலைகளில் தேங்கிக்கிடக்கும் மணல்திட்டுகளால் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு, விபத்து அபாயமும் அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, மாநகராட்சியின் 60 வார்டு பகுதிகளிலும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மணல் திட்டுகள் அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜார்ஜ் ரோடு பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல் திட்டுகளை அகற்றும் பணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு செய்து, அவற்றை முழுமையாக அப்புறப்படுத்த உரிய உத்தரவுகளை வழங்கினார்.

பின்னர், வாடி தெரு பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணிகளையும் மேயர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு சாலைப் பணிகள் தரமாகவும் விரைவாகவும் செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் உள்ளிட்ட மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.