தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்தார். மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி முன்னிலை வகித்தார்.

மேயர் பேசுகையில், கடந்த 21 மாதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் மூலம் மக்கள் கோரிக்கைகள் தொடர்ந்து தீர்க்கப்பட்டு வருவதாகவும், பிறப்பு - இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் இணைப்பு, சாலை, பாதாள சாக்கடை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான மனுக்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றோம் என்றார்.

தெற்கு மண்டலத்தில் பெறப்பட்ட 673 மனுக்களும் ஏறக்குறைய தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சமீபத்திய கனமழையில் குறிப்பாக 16, 17, 2-ஆம் வார்டுகளில் தேங்கிய நீரை மின்மோட்டார் மற்றும் வடிகால் வழியாக வெளியேற்றியுள்ளதாகவும், கோரம்பள்ளம் குளம் நிரம்பி உப்பாற்று வழியாக 12 கி.மீ தூரம் நீர் கடலுக்குச் செல்கிறது என்பதால் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறினார்.

உப்பளத்தை ஓட்டியுள்ள பொன்பாண்டி நகர், கோயில் பிள்ளைநகர் பகுதிகளில் நீர் தேங்கியதை சரி செய்துள்ளோம். “எந்த மழை வந்தாலும் அதை சமாளித்து எதிர்கொள்ள மண்டல அலுவலர்கள் முதல் பொறியாளர்கள் வரை 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளோம்” என்று மேயர் உறுதியளித்தார்.

பொதுமக்கள் கோரிக்கைகள் – உடனடி பதில்கள் மாடுகள் மற்றும் நாய்களின் அதிக நடமாட்டத்தால் விபத்துகள் ஏற்படுகிறது என்ற பொதுமக்கள் குறையை திறமையாக கேட்டார் மேயர். மாநகராட்சியில் 7,000 நாய்கள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டு, மண்டல வாரியாக கருத்தடை செய்யப்படுகிறது என தெரிவித்தார். திருச்செந்தூர் சாலை, எட்டையாபுரம் ரோடு, ஸ்டேட் பாங்க் காலனி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிகமாக நடமாடுவதால் அவற்றை கோசோலையில் அடைக்கும் நடவடிக்கைகள் நடப்பில் உள்ளன என்றார்.

57வது வார்டில் இல்லாத குடிநீர் இணைப்புக்கே 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியதற்கு, “அதை முழுமையாக விசாரித்து விரைவில் தீர்வு காணப்படும்” என்று மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.