தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முன்னேற்ற நிலையை நேரில் ஆய்வு செய்ய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. இன்று மாப்பிள்ளையூரணி, தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் நீரேற்றும் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பரிசோதனைக்குப் பிறகு பொதுமக்களுடன் கலந்துரையாடிய அவர், குடிநீர் விநியோகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், தூத்துக்குடி சுற்றுவட்டார மக்களுக்கு நீண்டநாள் நீர்விநியோகப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.