தூத்துக்குடி வஉசி மார்க்கெட் மேற்கு வாசல் மற்றும் உள் பகுதிகளில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, சேறும் சகதியுமாக மாறி வியாபாரிகளும் பொதுமக்களும் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கியிருந்தனர். இதனை சரிசெய்து சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. பி. கீதாஜீவன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் நேரில் வஉசி மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு, தண்ணீர் தேங்காத வகையில் தளம் அமைக்கும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து அவர் பேசியதில்,
“அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் வணிகர்களை முழுமையாக முடக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதித்தனர். ஆனால் திமுக ஆட்சி பதவியேற்ற பிறகு வியாபாரிகள் நலனுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

வணிகர்கள் சங்கம் மாநில நிர்வாகிகள் சந்தித்தபோது வைத்த கோரிக்கைகளில், வணிக நேரம் நீட்டிப்பது, வணிகர் நல வாரியம் சீராக செயல்படுவது உள்ளிட்டவை உடனடியாக நிறைவேற்றப்பட்டன. இன்று வணிகர்கள் இரவு 12 மணி வரை அல்லது 24 மணிநேரமும் தங்களது தொழிலை தடையின்றி செய்து வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் காவல்துறை இரவு நேரங்களில் கடைகளை மூடச்செய்து பொருட்களை சாலையில் வீசிய நிகழ்வுகளை மக்கள் மறக்கவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் நான்கரை ஆண்டுகளாக வணிகர்கள் எந்தவித இடையூறும் இன்றி தொழில் செய்வதற்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. வியாபாரிகளின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றியது திமுக ஆட்சிதான்,” என அமைச்சர் கீதாஜீவன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வஉசி மார்க்கெட் ஐக்கிய வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புராஜ், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், துணைச்செயலாளர் உத்திரபாண்டி உள்ளிட்டோர் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

ஆய்வின்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்ட பிரதிநிதி பாஸ்கர், மணி அல்பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.