மார்ச் 24 மற்றும் 25ம் தேதிகளில் திட்டமிட்டபடி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் என, டி.எப்.பி.யு., எனும் வங்கி கூட்டமைப்புகளின் கூட்டுக்குழு தெரிவித்துள்ளது.

வங்கி பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்க ஐ.பி.ஏ., என்னும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற கூட்டம் தோல்வியடைந்ததால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூ.எப்.பி.யு., சங்கம் என்பது வங்கி கூட்டமைப்புகளை உள்ளடக்கிய அமைப்பாகும். திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் பட்சத்தில் இந்த கூட்டமைப்புகளின் கீழ் உள்ள அனைத்து வங்கிகளின் பணியாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவர் என்பதால் வங்கி சேவைகள் இரு நாட்களுக்கு கடுமையாக பாதிக்கப்படக்கூடும்.

வாரத்துக்கு ஐந்து வேலை நாட்கள் பணிச்சுமையை குறைக்க, கூடுதல் வங்கி பணியிடங்களை நிரப்புதல், வங்கிகளின் இயக்குனர் குழுவில் உள்ள வொர்க் மேன், ஆபீசர் டைரக்டர், பணியிடங்களை நிரப்புதல் மற்றும் செயல்பாட்டுக்கேற்ப ஊக்கத்தொகை திட்டத்தை கைவிடுதல், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக யூ.எப்.பி.யு., தெரிவித்திருந்தது.

மேலும் வங்கிகளின் இயக்குனர் குழு வின் தன்னாட்சி அதிகாரத்தை குறித்து மதிப்பிடும் வகையில் மத்திய நிதி சேவைகள் துறையின் தலையீடு அதிகரித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதுபோன்ற நடவடிக்கைகளால் வங்கி பணியாளர்களின் வேலை உத்தரவாதத்திற்கு ஆபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர பணிக்கொடை சட்டத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து வங்கி பணியாளர்களுக்கான பணிக்கொடை உச்சவரம்பை 25 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், இதை அரசு ஊழியர்களுக்கான திட்டத்துடன் இணைத்து வருமான வரி விலக்கு வழங்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

வங்கி ஸ்டிரைக் திட்டமிடப்பட்டுள்ள மார்ச் 24, 25 திங்கள், செவ்வாய் : 22ம் தேதி நான்காவது சனிக்கிழமை, 23ம் தேதி ஞாயிறு சேர்த்தால் நான்கு நாட்கள் வங்கியில் செயல்படாத நிலை ஏற்படும்.