தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று திருச்சியில் மாநில அளவில் முதியோர்களுக்கான புதிய நலத்திட்டமான “அன்புச் சோலை” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சந்திரசேகர் நகரில், அத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள முதியோர் மனமகிழ்வள மையக் கட்டிடத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு. ஜெகன் பெரியசாமி அவர்கள் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட மேயர் ஜெகன் அவர்கள், மையத்துக்குள் சென்று அங்கு இருந்த முதியோர்களுடன் நலம் விசாரித்தார். அவர்களுடன் அன்பாக உரையாடிய அவர், கேரம் போர்டில் அவர்களுடன் சிறிது நேரம் இணைந்து விளையாடியும் மகிழ்ந்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மேயர் ஜெகன் அவர்கள் கூறுகையில்: “தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்காக அன்போடு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் முதியோர்களின் நலனை முன்னிலைப்படுத்தும் ‘அன்புச் சோலை’ முக்கியமானது. முதியோர்கள் தங்களின் ஓய்வுநேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கவும், நண்பர்களுடன் கலந்துரையாடவும், பொழுதுபோக்கிற்கான வசதிகளை அனுபவிக்கவும் இந்த மையம் உதவும். இதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

மேலும், முதியோர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அரசு மற்றும் மாநகராட்சி இணைந்து செய்து தரும் என்றும் அவர் உறுதியளித்தார்.