தூத்துக்குடி அனைத்து மகளிர்  காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு 11 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த குருசாமி மகன் மாரிமுத்து (45) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. சுரேஷ் அவர்கள் இன்று (14.03.2025) குற்றவாளியான மாரிமுத்து என்பவருக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்குஅரசு நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. வனிதா அவர்களையும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. முத்துலட்சுமி அவர்களையும் விசாரணைக்கு உதவியாக இருந்த  பெண் தலைமை காவலர் திருமதி. ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ‌‌.கா.ப அவர்கள் பாராட்டினார்.