தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியைச் சேர்ந்த பகவதிநாதன் என்ற குடியிருப்பாளர், கடந்த ஆறு வருடங்களாக இல்லாத குடிநீர் இணைப்புக்கே 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை வசூலிக்க முற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையால் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளார்.

பகவதிநாதனின் வீட்டில் ஒரே ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே இருந்தும், 2019 முதல் 2025 வரை இரண்டு இணைப்புகள் உள்ளதாக பதிவிட்டு, அதற்கான தொகையை செலுத்த வேண்டும் என மாநகராட்சி வாழ்வு ஆபரேட்டர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து தெரிவித்து, இணைப்பை துண்டிக்க முயன்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த பகவதிநாதன், “எனக்கு ஒரு குடிநீர் இணைப்பு தான் உள்ளது; பயன்படுத்தியதற்கான பணத்தையும் சரியாக செலுத்திவிட்டேன். இல்லாத இணைப்புக்காக 25,000 ரூபாய் எப்படி செலுத்துவது?” என்று அதிகாரிகளிடம் வினவியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரை அவர் புதன்கிழமை நடைபெற்ற தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன், “உங்களின் மனு குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்படும். உண்மை நிலை ஆய்வின் அடிப்படையில் விரைவில் தீர்வு வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.