தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பருவமழை முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, மழைக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான வழிமுறைகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப. உடன் கலந்து கொண்டு, பருவமழை காலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு, நீர் தேக்கம், வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட அவசரகால நடவடிக்கைகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

பொதுமக்கள் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, மாநகராட்சி முழுமையாக தயாராக உள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.