சமையல் எரிவாயு நுகர்வோர்கள் கேஸ் ஏஜென்சிக்கு சென்று விரல் ரேகை பதிவு, விழிரேகை பதிவு அல்லது முகப்பதிவு செய்யும் கால அவகாசத்தை நீட்டிக்க கலெக்டர் இளம் பகவத் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயக ரமேஷ் ஆகியோர் கலெக்டர் இளம் பகவத்திற்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-

மத்திய அரசின் மானிய தொகை ஒவ்வொரு சிலிண்டருக்கும் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு சமீப காலமாக நுகர்வோரின் உண்மை தன்மையை சரிபார்த்து வருகிறது. இதனால் சிலிண்டர் இணைப்பு யார் பெயரில் இருக்கிறதோ அவர்கள் அந்தந்த கேஸ் ஏஜென்சிக்கு நேரடியாக சென்று அங்குள்ள கருவியில் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். அல்லது விழி ரேகை, முகப்பதிவு வாயிலாகவும் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் வாடிக்கையாளர்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கேஸ் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விபரங்கள் நுகர்வோருக்கும், பொதுமக்களுக்கும் சரியாக சென்றடையவில்லை இது சம்பந்தமாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை இதனால் விரல்ரேகை, மற்றும் விழிரேகை, முகப் பதிவுகளை பலரால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

விரல் ரேகை பதிவு செய்யாதவர்களுக்கு இந்த மாதம் முதல் எரிவாயு சிலிண்டர் நிறுத்தப்படும் என்ற தகவலும் பரப்பப்பட்டு வருகிறது.

இதனால் இந்த மாதம் பதிவு செய்தால் எரிவாயு சிலிண்டர் கிடைக்குமா என்கிற சந்தேகம் நுகர்வோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல இணைப்புகள் யார் பெயரில் உள்ளதோ அவர்களின் இறப்பிற்குப் பிறகு பெயர் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது.

இதனால் அவர்களின் இணைப்புகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டால்தான் அவர்கள் நேரில் சென்று வென்று அல்லது முகப்பதிவு செய்ய முடியும் இதற்கு கால அவகாசம் ஆகும். இதனால் இந்த பதிவுக்கு மேலும் மாத காலம் நீட்டிப்பு செய்ய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு மனதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.