தூத்துக்குடி, நெல்லை, மதுரை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அபூர்வமான குளிர் நிலவி வருகிறது. நேற்று மாலை முதல் திடீரென அதிக பனி பெய்ததால், பகலிலும் வெப்பநிலை கடுமையாக சரிந்து மக்கள் நடுக்கத்துடன் வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

வானிலை ஆய்வு மையத்தின் வரலாற்று பதிவுகளின்படி, தென் மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத குறைந்த பகல் வெப்பநிலை இக்காலகட்டத்தில் பதிவானது குறிப்பிடத்தக்கது. ஊட்டி, கொடைக்கானலை மிஞ்சும் வகையில் நிலவும் இந்த குளிர், தென்தமிழக மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வரலாற்று வெப்பநிலை சாதனைகள்:

நெல்லை : 22°C

மதுரை : 22.6°C

கோவில்பட்டி : 21.8°C

தென்காசி : 21°C

தூத்துக்குடி : 20.5°C

திருச்செந்தூர் : 20°C

பாம்பன் : 23°C

கன்னியாகுமரி : 26.6°C

வானிலை மையம் குறிப்பிட்டதாவது: “மார்கழி–தை மாதங்களிலும் கூட தென் மாவட்டங்களில் இத்தகைய குறைந்த பகல் வெப்பநிலை பதிவானது இல்லை. இன்று பதிவான வெப்பநிலைகள் வானிலை வரலாற்றில் புதிய சாதனையாக இருக்கும்.”

அதிக பனி மற்றும் மூடுபனி காரணமாக மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இயங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி குளிர் – ஸ்டெர்லைட் மூடப்பட்டதின் பலன்: வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கருத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் வெப்பநிலை 20.5°C வரை சரிந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான காரணங்களைப் பேசும் பொதுமக்கள் பலருடன் இணைந்து, “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின் தூத்துக்குடியின் காற்றுத் தரம் மேம்பட்டு, குளிர் நிலை கூடிவிட்டது. இன்று ஊட்டி மாதிரி குளிர் அனுபவிப்பது தூத்துக்குடிக்கான புது மாற்றம்” என்று வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார்.