2026ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் இந்திய அரசியலில் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கியுள்ளன என்று பாஜக ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஆர். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் பல ஆண்டுகளாக நிலவி வந்த அரசியல் மரபுகளையும் பழைய நம்பிக்கைகளையும் முறியடித்து, மாற்றத்திற்கான புதிய அடித்தளத்தை அமைத்துள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் அரசியல் செய்ய பணமும், பெரும்பான்மை சமூக ஆதிக்கமும் அவசியம், அனுபவமிக்க முதியவர்களுக்கே முன்னுரிமை போன்ற கருத்துக்கள் நீண்ட காலமாக நிலவி வந்தன. ஆனால், சமீபத்திய தேர்தல் முடிவுகள் இந்த எண்ணங்களை முற்றிலும் மாற்றியமைத்துள்ளன என அவர் குறிப்பிட்டார்.
மக்கள், குறிப்பாக இளைஞர்கள், பழைய அரசியல் கோட்பாடுகளை மறுத்து மாற்றத்தை நோக்கி வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது. பீகாரில் கிடைத்த வெற்றி மற்றும் கேரளாவில் அதிகரித்த வாக்கு சதவீதம் ஆகியவை இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பின் விளைவாக உருவான புதிய அரசியல் சக்தியை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது வெறும் வாக்காளர்களாக மட்டுமல்லாமல், தீர்மானங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. இதன் மூலம் அரசியல் தரமும் பொறுப்புணர்வும் உயர்கிறது. இன்றைய இளம் தலைமுறை பழைய சித்தாந்த விவாதங்களில் சிக்காமல், வேலைவாய்ப்பு, கல்வி, தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற நடைமுறை தேவைகளை மையமாகக் கொண்டு சிந்திக்கிறது என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மூத்த அரசியல்வாதிகள் தங்கள் அனுபவத்தை வழிகாட்டுதலாக வழங்கி, இளம் தலைமுறைக்கு இடம் கொடுத்தால், அது அரசியலில் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் என அவர் வலியுறுத்தினார்.
“இளம் ரத்தம் அரசியலில் பாய்ந்தால் மட்டுமே உண்மையான மாற்றம் சாத்தியம். அது எதிர்கால தலைமுறையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும். இந்தியாவின் வளர்ச்சிக்கும் இது வலுவான அடித்தளமாக அமையும்,” என்று ஜெயக்குமார் கூறினார். முடிவில், இளைஞர்கள் அரசியலில் அதிகமாக ஈடுபடுவது ஜனநாயகத்தின் வலிமையை உயர்த்தும் நல்ல அறிகுறி என குறிப்பிட்ட அவர், “எதிர்காலம் யாருடையது?” என்ற கேள்விக்கு இன்றைய பதில் – “இளைஞர்களின் கையில் தான்!” என்பதாக இந்தத் தேர்தல் நிரூபித்துள்ளது என்றார்.