தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இடையறாது பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, மச்சாது நகர் பகுதியில் உள்ள பாதாள சாக்கடை துணை கழிவுநீர் ஏற்றுநிலையத்தின் வழியாக மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி மச்சாது நகர் பகுதியில் நேரில் சென்று மழைநீர் வெளியேற்றப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, துணை கழிவுநீர் ஏற்றுநிலையத்தில் மின் மோட்டார் இடையறாது இயங்கிக் கொண்டிருப்பதை உறுதி செய்து, மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், மழைநீர் ஓட்டம் வழிமுறையாக நீங்கும் வரை அந்தப் பகுதியில் எச்சரிக்கையாக பணியாற்றுமாறு பணித்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் இணைந்து ஆய்வில் கலந்து கொண்டனர்.