தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையை தொடர்ந்து மாநகரில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு மற்றும் மாநகராட்சி நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புறநகர் பகுதிகளிலிருந்து வரக்கூடிய வெள்ளநீர் மாநகருக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டு, அனைத்து பகுதிகளிலும் நீர் ஓட்டம் சீராக இருக்கும் வகையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சியின் 16, 17, 18 ஆம் வார்டுகளில் பாதாள சாக்கடை மற்றும் சாலை பணிகள் நடைபெறுவதால் சில இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. அதனை விரைவாக வெளியேற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேயர் ஜெகன் பெரியசாமி பண்டாரம்பட்டி மற்றும் ஆதிபராசக்தி நகர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சங்கரப்பேரி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றப் பணிகளையும் மேயர் கண்காணித்தார். புறவழிச்சாலையில் இருந்து வரும் நீர் சங்கரப்பேரி வடிகாலின் வழியாக பெரிய பள்ளம் ஓடை நோக்கி செல்லும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகளுக்கு அந்த பகுதியை தொடர்ந்து கண்காணிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு நிலவரத்தை ஆய்வு செய்தனர்.
மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.