தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாநில–மாவட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் அரசியல் நிலைப்பாடுகள், மக்களிடையே கொண்டு செல்ல வேண்டிய திட்டங்கள், நடந்து முடிந்த தேர்தல்களில் ஏற்பட்ட வெற்றி–தோல்வி காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், தேர்தல் பணிகளில் தொண்டர்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு மற்றும் களப்பணிகள் பாராட்டப்பட்டதுடன், சில பகுதிகளில் ஏற்பட்ட ஒருங்கிணைப்பு சவால்கள் குறித்தும் திறந்த மனதுடன் கருத்து பரிமாற்றம் நடைபெற்றது.
தேர்தல் முடிவுகள் சில தொண்டர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதனை மனஉறுதியுடன் எதிர்கொண்டு அடுத்த கட்ட அரசியல் பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும் என மாநில நிர்வாகிகள் உற்சாகம் அளித்ததாக கூறப்படுகிறது. “தொண்டர்களின் உழைப்பு ஒருபோதும் வீணாகாது; மக்கள் மத்தியில் தொடர்ந்து செயல்பட்டால் கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்” என நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ராஜேஷ், ஆறுமுகம், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா கண்ணன், விவேகம் ரமேஷ், மாவட்ட பொருளாளர் பரமசிவம், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் டி. ராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் சிவராமன், சத்தியசீலன், சண்முகசுந்தரம் உள்ளிட்ட மாநில, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.