தூத்துக்குடி துறைமுகத்தை ஒட்டிய கடலோரப் பகுதிகளான முள்ளக்காடு, முத்தையாபுரம், புல்லாவழி, பழையகாயல் உள்ளிட்ட இடங்களில் பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் உப்பளத் தொழிலை அழித்து, கப்பல் கட்டும் விரிவாக்கத் தளம் அமைக்கப்பட கூடாது என வலியுறுத்தி உப்பள தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இணைந்து முத்தையாபுரம் பஜாரில் இரண்டாவது முறையாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இப்போராட்டத்திற்கு உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேகர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மந்திரமூர்த்தி, பொன்ராஜ், சின்னராஜ், முகேஷ் சண்முகவேல், சிவாகர், பாலசுப்பிரமணியன், ஈபால், பொன்ராம், பிரபாகர், பாரத், ஸ்ரீராம், முருகேசன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் உப்பளத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பொன்ராஜ், பேச்சிமுத்து, பூமயில், பரமசிவன், முனியசாமி, விவசாய சங்க ஜோதிமணி, வியாபாரிகள் சங்க அன்னசேகர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
மதசார்பற்ற ஜனதாதள கட்சி மாநில துணைத்தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
பின்னர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பேசியதாவது “பல தலைமுறைகளாக உப்பள உற்பத்தியில் ஈடுபட்டு வரும் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடாது. துறைமுகத்திடம் ஏற்கனவே 12 ஆயிரம் ஏக்கர் நிலம் உள்ளது. அதனைப் பயன்படுத்தலாம். திமுக அரசு மற்றும் கனிமொழி எம்பி விரும்பினால், இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த முடியும். இதே நிலை தொடர்ந்தால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிமுக துணை நிற்கும். இதுகுறித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பேச நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் பேசும்போது, “ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது, இந்த திட்டத்தை நிறுத்தி வைத்து தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுத்தார். ஆனால் தற்போது திமுக அரசு சிலரது சுயலாபத்திற்காக இதே இடத்தில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துகிறது. இதனை அதிமுக கடுமையாக கண்டிக்கிறது. தொழிலாளர்கள், உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்,” என்று தெரிவித்தார்.
இதேபோல் ஐ.என்.டி.யு.சி தொழிற்சங்க தேசிய செயலாளர் கதிர்வேல், தமிழக வெற்றி கழகம் ஜே.கே.ஆர். முருகன், நாம் தமிழர் கட்சி ஜேக்கப் தேவதாஸ், அபிஷேக், அன்னலட்சுமி, உழவர் உழைப்பாளர் கட்சி ராஜேஷ், மீனவர் சங்கம் முனியசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு உப்பளங்களை பாதுகாக்க வலியுறுத்தினர்.