ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மாப்பிளையூரணி ஊராட்சியில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி ஹௌசிங் போர்டு காலனி அருகே உள்ள உப்பாற்று ஓடை வழியாக காட்டாற்று வெள்ளம் கடலில் கலக்குகிறது. வரவிருக்கும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, வெள்ள நீர் தடையின்றி கடலில் கலக்க உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது குறித்து, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, உப்பாற்று ஓடையில் தூர்வாருதல் பணிகள், முற்செடிகள் அகற்றுதல் மற்றும் நீர் ஓட்டத்தை சீராக்கும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, தேவையான முன்னெச்சரிக்கை வழிமுறைகளை வழங்கினார். மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு பாதிப்புகளைத் தவிர்க்க முன்கூட்டியே அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்படுமாறு அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர்கள் சண்முகவேல், திருமேனி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், ஜவகர், நீர்வளத்துறை உதவி பொறியாளர் பாலமுருகன், உதவி பொறியாளர் காயத்ரி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உப்பாற்று ஓடை வழித்தடத்தில் தடையின்றி நீர் பாய்ச்சும் பணிகள் விரைவில் துவங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.