தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள பழைய தாலுகா அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்கள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பச்சையப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த இரு உறுப்பினர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சங்கத்தின் வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டன.
கடந்த செயற்குழுக் கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளில் இருந்தவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து, புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவராக ஊரக வளர்ச்சித் துறையைச் சேர்ந்த கனகராஜ் மற்றும் மாவட்டச் செயலாளராக கால்நடைத் துறையைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊர்தி ஓட்டுநர்கள் கலந்துகொண்டு, புதிதாகத் தேர்வான நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து, சங்க வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் செயல்பட உறுதியேற்றனர்.