‘கிரீன் காப்பர்’ எனப்படும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முழு வெளிப்படைத்தன்மையுடன் Sterlite Copper ஆலையை மீண்டும் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் செயல் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி பிரஸ் கிளப்பில் நிருபர்களிடம் பேசிய இந்து வியாபாரிகள் சங்க மாநிலத் தலைவர் ஈஸ்வரன், மாவட்டத் தலைவர் மாதவன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன், மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவர் கணேசன், வாழ்வாதார பாதுகாப்பு சங்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கூறியதாவது 2018-ம் ஆண்டு ஆலையடைப்பு காரணமாக மாவட்ட பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. நேரடி, மறைமுகமாக ஆயிரக்கணக் கானோர் வேலை இழந்தனர். சார்பு தொழில்கள் முடங்கியதால் பல குடும்பங்கள் நெருக்கடிக்கு தள்ளப்பட்டன.
‘கிரீன் காப்பர்’ தொழில்நுட்பம் குறைந்த மாசு உமிழ்வுடன் சுத்தமான உற்பத்தியை வழங்கும் என கூறப்படுகிறது. நேரடி சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு, சுயாதீன ஆய்வு, பொதுமக்கள் அணுகக்கூடிய தகவல் வெளியீடு போன்றவை உறுதி செய்யப்பட்டால், இது நிலையான தொழில் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்பாக அமையும்.
இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த Madras High Court கருத்தை வரவேற்கிறோம். சட்டப்படி, காலக்கெடுவுடன் வெளிப்படையான நடைமுறையில் ஆலையை மீண்டும் திறப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பகுதி வளர்ச்சியும் இணைந்து செல்ல வேண்டும் என்றனர்.