தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகளின் தரம், வேகம் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே முதன்முறையாக தூய்மை பணியாளர்களின் பசியை போக்கும் நோக்கில் தொடங்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்ட பணிவேளையிலேயே உணவு வழங்கும் திட்டம், தூத்துக்குடி மாநகராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபடும் நேரத்திலேயே சத்தான உணவு வழங்கப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் (இ.ஆ.ப), மாநகராட்சி ஆணையர் பிரியங்கா (இ.ஆ.ப), துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.