இன்று பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்த 88வது மத்திய பட்ஜெட், அவரது 9வது பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மேலும், 27 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என்பதால், இம்முறை பட்ஜெட்டிற்கு தனித்துவமான முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை பொதுமக்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை தமிழக முழுவதும் மத்திய பட்ஜெட் நேரலை ஒளிபரப்பை திரையிட்டு அனைவரும் பார்வையிட வேண்டும் என அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், இன்று டபிள்யூ.ஜி.சி. ரோட்டில் அமைந்துள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தில், மத்திய பட்ஜெட் நேரலை திரையிட்டு ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்வில், கிங்ஸ் அகடாமி நிறுவனத்தின் நிறுவனர் பேச்சிமுத்து அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாநில, மாவட்ட, மண்டல அளவிலான பாஜக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டு, மத்திய பட்ஜெட் உரையை கவனமாகக் கேட்டனர்.
குறிப்பாக, ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழில்துறைக்கு ஆதரவாக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைவரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பாஜக நிர்வாகிகள், “இந்த பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது. தமிழகத்திற்கும், குறிப்பாக தென் மாவட்டங்களுக்கும் பயனளிக்கும் வகையில் கட்டமைப்பு வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தனர்.
மேலும், வளர்ச்சி – நலன் – நிலைத்தன்மை என்ற மூன்று அம்சங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பட்ஜெட், ‘வளர்ந்த இந்தியா’ என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு கனவை நனவாக்கும் பட்ஜெட் எனவும் அவர்கள் பாராட்டினர். இந்த நிகழ்வு, பொதுமக்களிடையே மத்திய அரசின் திட்டங்கள் குறித்த புரிதலை அதிகரிக்கும் வகையில் அமைந்ததாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், மாவட்ட துணைத் தலைவர்கள் சண்முகசுந்தரம், சிவராமன், மாசாணம், மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ், ஓபிசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி உள்ளிட்ட அணி, பிரிவு தலைவர்கள், துணைத் தலைவர்கள், மண்டல் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.