தூத்துக்குடி மாநகரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பக்தி, பாரம்பரியம் மற்றும் கலாச்சார அடையாளமாக நடைபெற்று வரும் தெப்பக்குள தெப்பத் திருவிழாவை இந்த ஆண்டு நடத்த மறுப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என பாஜக மாவட்ட துணை தலைவர் வக்கீல் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தெப்பக்குளம் பழுதடைந்துள்ளதாக காரணம் கூறி, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரியமான தெப்பத் திருவிழாவை ரத்து செய்ய முயல்வது, பக்தர்களின் ஆன்மிக நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் புறக்கணிக்கும் செயலாகும் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தெப்பக்குளத்தின் பராமரிப்பு, சீரமைப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை காலத்துக்குள் மேற்கொள்ள வேண்டியது இந்து சமய அறநிலையத்துறையின் முக்கிய கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார். “அறநிலையத்துறை கூறியபடியே செயல்படுகிறோம்” என கூறி, மாநகராட்சி நிர்வாகம் தங்களது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயல்வது கபட நாடகமாகவே பார்க்கப்படுகிறது என்றும் அவர் விமர்சித்தார்.
தைப்பூச தெப்பத் திருவிழா என்பது வெறும் ஒரு நிகழ்ச்சி அல்ல; அது தூத்துக்குடி மக்களின் ஆன்மிக வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபு. இந்து சமய வழிபாட்டு நிகழ்ச்சிகளையும் பாரம்பரிய திருவிழாக்களையும் அலட்சியப்படுத்தும் போக்கு தொடர்ந்து காணப்படுவது மிகுந்த கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், தெப்பக்குளத்தை உடனடியாக சீரமைத்து, தேவையான பாதுகாப்பு மற்றும் மாற்று ஏற்பாடுகளை செய்து, இந்த ஆண்டுக்கான தைப்பூச தெப்பத் திருவிழாவை கட்டாயம் நடத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறையும், தூத்துக்குடி மாநகராட்சியும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பக்தர்களின் நம்பிக்கையை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் ஏற்றுக்கொள்ள முடியாது. தெப்பத் திருவிழாவை நடத்தத் தவறினால், பக்தர்கள் மற்றும் பொதுமக்களை ஒருங்கிணைத்து ஜனநாயக ரீதியான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் இந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் மாநில ஓபிசி செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மண்டல செயலாளர், ஆன்மீகப் பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, ஆன்மீகப் பிரிவு மாவட்ட துணை தலைவர் உஷா தேவி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பிதலீஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.