தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் உற்சாகமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலை வகித்தார்.
விழாவின் ஒரு பகுதியாக லக்கி கேம், பானை உடைத்தல், கயிறு இழுத்தல், லெமன் இன் த ஸ்பூன், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாநகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மகிழ்ந்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரே மேடையில் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டது விழாவிற்கு கூடுதல் சிறப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், திமுக பகுதி செயலாளர்கள், திமுக வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
ஒற்றுமை, சமத்துவம் மற்றும் தமிழர் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழா, தூத்துக்குடி மாநகராட்சியில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த நிகழ்வாக அமைந்தது.