தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான அரசியல் சூழல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன் விருப்பமனு வழங்கியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்பமனு வழங்கலாம் என, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனு பெறும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் 23ஆம் தேதிக்குள் விருப்பமனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த அறிவுறுத்தலின் அடிப்படையில், தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நிலா சந்திரன் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனுவை சமர்ப்பித்தார். இதன்மூலம் தூத்துக்குடி அரசியல் களத்தில் அதிமுகவின் வேட்பாளர் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.