தூத்துக்குடி தொகுதியில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வடக்கு பகுதி செயலாளர் ஜெய் கணேஷ் விருப்பமனு வழங்கினார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமையகம் எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனு வழங்கலாம் என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல தொகுதிகளில் இருந்து விருப்பமனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் வரும் 23ம் தேதிக்குள் சென்னை எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வடக்கு பகுதி செயலாளர் ஜெய் கணேஷ் தனது விருப்பமனுவை வழங்கினார். இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் கோகுலஇந்திரா, தொழிற்சங்க செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலையில் விருப்பமனு வழங்கப்பட்டது.
மேலும், பகுதி செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மெஜிலா, சேர்மன் வசந்தா மற்றும் சென்னை தொழிலதிபர் சேர்மராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.