தூத்துக்குடி மாநகராட்சி 1-வது வார்டு, மீளவிட்டான் ரோட்டில், என்.டி.பிஎல் நிறுவனத்தின் CSR நிதியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மையம் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அவர்களால் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பின்னர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை சிறப்பித்தார்.
அமைச்சர் பேசுகையில், “அங்கன்வாடி மையங்களின் மூலம் குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், கல்வி வளர்ச்சி ஆகியவை வலுப்படுத்தப்படுகின்றன. பெற்றோர்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குழந்தைகளை நன்றாக பாதுகாத்து வளர்க்க முடியும். இதனால் ஊட்டச்சத்து மீதான விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களும் கடைபிடிக்க வேண்டும்,” என அறிவுரை வழங்கினார்.
மேலும், “முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு புதுமைபெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இன்று தகுதியுள்ளவர்களுக்கு விடுபட்ட மகளிர் உரிமைத் தொகையை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மாலை அளவில் தகுதியுள்ளவர்களின் வங்கி கணக்கில் தொகை வரவு செய்யப்படும்,” என்றார்.
புதிய அங்கன்வாடி மையத்துக்குள் விஜயம் செய்த அமைச்சர் கீதா ஜீவன், சிறுவர்-சிறுமிகளுக்கு இனிப்புகளை வழங்கி நலம் விசாரித்தார். குழந்தைகளுடன் கலந்துரையாடி அன்பாக அரவணைந்த அவர், “குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கும்போது பாதுகாப்பாக, கவனமாக வழங்க வேண்டும்,” என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (நகர்ப்புறம்) ரூபி பெர்னான்டோ, பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் செல்வி, உதவி செயற்பொறியாளர் அருண்குமார், உதவி பொறியாளர் ரேணுகா, என்.டி.பிஎல் தலைமை செயல் அதிகாரி அனந்தராமன், உதவி மேலாளர்கள் சரவணன், ரகுபதி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.