முன்னாள் முதலமைச்சர் காமராஜரையும், தமிழகத்தின் முன்னணி தொழில்வளர்ச்சி உருவாக்கிய நாடார் சமூகத்தையும் இழிவாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், யூடியூப் நிருபர் முக்தார் அகமது மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் ஜெயச்சந்திரன், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்து உள்ளார்.
புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
30.11.2025 அன்று “My India 24×7” என்ற யூடியூப் சேனலில் முக்தார் அகமது, கிறிஸ்தவ மத போதகர் காட்பிரே நோபலிடம் நடத்திய நேர்காணலில், தமிழக வரலாற்றின் முக்கிய தலைவராகவும் நேர்மையின் சின்னமாகவும் போற்றப்படும் காமராஜரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், தொழில், வியாபாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் தன்னிறைவு வளர்ச்சி காணும் நாடார் சமூகத்தை குறிவைத்து, சமூக விரோத நோக்கத்துடன் தவறான கருத்துக்கள் கூறி, “சிவகாசியில் கள்ள நோட்டுகள் தயாரிப்பு”, “உணவு பொருட்களில் கலப்படம்” போன்ற ஆதாரமில்லாத பொய்யுரைகளை பரப்பி, முழு சமூகத்தையும் இழிவுபடுத்தியதாக புகாரில் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
ஜாதி வெறியை தூண்டும் நோக்கத்துடன் வீடியோ தயாரிப்பு யூடியூப் பார்வையாளர்களை அதிகரித்து பண ஆதாயம் பெறும் நோக்கத்துடன், திட்டமிட்டு சமூக விரோதமாக கருத்துகளை பரப்பியதாகவும், இதன் மூலம் ஜாதி வெறி, சமூக கலவரம் போன்றவை உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளதாகவும் புகார் குறிப்பிடுகிறது.
1 கோடியே அதிகமான நாடார் சமூக மக்களின் மனஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் வெளியிட்ட பதிவுகள், தமிழகத்தில் அமைதிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நடவடிக்கை கோரிக்கை
ஜெயச்சந்திரன்,
முக்தார் அகமதுவை உடனடியாக கைது செய்ய,
பின்னணியில் செயல்படும் சமூக விரோத கும்பல்களையும் விசாரிக்க,
“My India 24×7” யூடியூப் சேனலை முடக்கம் செய்ய,
காமராஜர், நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்திய பதிவுகள் அனைத்தையும் உடனடியாக நீக்க செய்ய காவல்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடியில் இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.