தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியில் வசிக்கும் பகவதிநாதன் என்னும் குடிமகன், இல்லாத இரண்டாவது குடிநீர் இணைப்புக்காக 25 ஆயிரம் ரூபாய் வசூலிக்க முயன்ற மாநகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையால் சிரமத்தில் சிக்கியுள்ளார்.
பகவதிநாதனின் வீட்டில் ஒரே ஒரு குடிநீர் இணைப்பு மட்டுமே இருந்தும், 2019 முதல் 2025 வரை இரண்டாவது இணைப்பு இருப்பதாக பதிவிட்டு, அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என வாழ்வு ஆபரேட்டர்கள் நேரடியாக வீட்டுக்கு வந்து இணைப்பை துண்டிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பகவதிநாதன், “எனக்கு ஒரு இணைப்பு தான் உள்ளது, பயன்படுத்திய கட்டணத்தை முறையாக செலுத்தியுள்ளேன். இல்லாத இணைப்புக்காக 25,000 ரூபாய் எப்படி?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் பிரச்சினையை அவர் புதன்கிழமை நடைபெற்ற தெற்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகனிடம் நேரடியாக மனு மூலம் தெரிவித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன், “உங்கள் மனு குறித்து உடனடியாக உரிய அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். உண்மை நிலை உறுதிப்படுத்தப்பட்டதும் விரைவில் தீர்வு வழங்கப்படும்” என்று உறுதியளித்தார்.
குடிமகனின் புகாருக்கு மேயர் தலையீடு ஏற்படுத்தியதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து உள்ளூர் மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.