தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகில் மக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) சார்பில் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள SIR நடைமுறையை கண்டித்தும், திருநெல்வேலி கல்குவாரி கருத்துக்கேட்பு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் PUCL மாவட்ட தலைவர் முனைவர் பாதர் எக்ஸ்.டி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தமிழ் கனலி பேராசிரியர் பாத்திமா பாபு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல சமூக, மக்கள் இயக்க தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது கண்டனக் குரல்களை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் கண்டன உரை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில துணைச் செயலாளர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி பேசினார்.
நிகழ்ச்சியை PUCL மாவட்ட செயலாளர் தெர்மல் ராஜா, தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜா போஸ் ரீகன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பெருமளவில் பங்கேற்று, ஜனநாயக உரிமைகளை குறைக்கும் எந்த நடவடிக்கையையும் பொது மக்கள் ஏற்க மாட்டார்கள் என வலியுறுத்தினர்.