தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம் அதிகரித்த நிலையில், மழைநீர் வெளியேற்றப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று (25.11.2025) இன்று பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் தலைமையில் அதிகாரிகள் மழைநீர் வெளியேற்றப் பணிகளை விளக்கினர். ஆய்வில் மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஆதிபராசக்தி நகர் பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், வடிகால் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அகற்றப்படுகின்றன. மேலும், மழைநீர் தேக்கம் ஏற்படாத வகையில் தற்காலிக வழித்தடங்கள் மற்றும் மேல்நிலை வடிகால் வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தூத்துக்குடி நகரின் பல பகுதிகளில் மழை காரணமாக ஏற்பட்ட சீர்கேடுகளை சரிசெய்ய மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் இணைந்து நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. மழைநீர் முற்றிலும் அகற்றப்படும் வரை பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.