தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பருவமழை ஜனவரி மாதம் வரை தொடரும் என்பதையும், இடையிடையே புயல் உருவானால் மழைத் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதைவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து மக்கள் தங்கள் பகுதிகளில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய முக்கிய அறிவுறுத்தல்கள்:
மின்னல் தாக்கம் ஏற்படும் நேரங்களில் பழைய கட்டிடங்கள், பெரிய மரங்கள், மின்கம்பங்கள் அருகில் நிற்க வேண்டாம்.
கிராமங்களில் உள்ள சிறு, குறு குளங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறங்குவது தவிர்க்கப்பட வேண்டும்.
மழைநீர் செல்லும் வழித்தடங்களில் பயணிக்கும் போது கூடுதல் கவனம் வேண்டியது அவசியம்.
வீட்டில் மின்சாதனங்களை பயன்படுத்தும் போது கைகளில் ஈரப்பதம் இல்லாமல் சுவிட்சுகளை இயக்க வேண்டும்.
விவசாயம் மற்றும் ஆடு, மாடு, கோழிகள் போன்ற உயிர்களுக்கு மழைநீர் மிகவும் முக்கியம் என்பதால் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திமுகவினர் தங்கள் பகுதிகளில் தேவைக்கேற்ப பொதுமக்களுக்கு பல்வேறு உதவிப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சுகாதார பாதுகாப்பு குறிப்பு:
இல்லங்களில் தேவையற்ற டயர், குடிநீர் தொட்டிகள், சிரட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
இது மூலம் கொசு வளர்ச்சி தடுக்கப்பட்டு, தொற்றுநோய்கள் வராமல் தடுக்க முடியும்.
“வரும் முன் காப்போம்” என்ற திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டை முன் உதாரணமாகப் பாதுகாத்து, மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டார்.