தூத்துக்குடி மாநகராட்சி நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், நகரத்தின் பாதுகாப்பு மற்றும் சுத்தம் பேணுவதற்காக மாநகரை முழுமையாக கண்காணிக்கும் வகையில் 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக, ரோட்டரி கிளப் சங்கத்தின் சார்பில் 48 கேமரா பொருத்தப்பட்டு, அதன் துவக்க விழா கங்கா பரமேஸ்வரி நகர் பூங்காவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, அரசு அதிகாரிகள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பூங்காவில் பொருத்தப்பட்ட கேமராக்களை பார்வையிட்ட பிறகு, மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு அறையில் எல்இடி திரையின் மூலம் மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் செயல்பாடுகளை மேயர் மற்றும் ஆணையர் நேரடியாக பார்வையிட்டனர். ஒவ்வொரு சாலை, ஓடை, கழிவுநீர் கான் ஆகிய இடங்களில் நடக்கும் செயல்பாடுகள் தெளிவாக திரையில் காணப்பட்டன.
மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து இக்கேமரா இணைப்புகள் மூலம் நகரம் முழுவதையும் கண்காணிக்க முடியும். குறிப்பாக பக்கீல் ஓடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் பொதுமக்கள் குப்பை வீசுவதை கட்டுப்படுத்தவும், மழைக்காலங்களில் நீர் தேங்கும் பகுதிகளை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் இது உதவும் என தெரிவிக்கப்பட்டது.
மேயர் ஜெகன் தெரிவித்ததாவது: “மாநகரில் மொத்தம் 3000 கேமராக்கள் பொருத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் நகரின் ஒவ்வொரு மூலையும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடிகிறது. இது மழைநீர் மேலாண்மை, சாலை பாதுகாப்பு மற்றும் சுத்தம் பேணுவதில் பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.
இந்த முயற்சியால் தூத்துக்குடி மாநகராட்சி ஒரு நவீன கண்காணிப்பு மையமாக மாறி, இனி நகரில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும் மாநகராட்சி கண்காணிப்பில் இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.