தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 07.04.2025 அன்று சட்டமன்ற பேரவையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், பாக் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் வசிக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் “சிறப்பு மாற்று வாழ்வாதாரத் திட்டம்” அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, மீனவர்களுக்கும் மீனவ மகளிர்களுக்கும் மதிப்புகூட்டப்பட்ட மீன் பொருட்கள் தயாரித்தல், கடற்பாசி வளர்ப்பு மற்றும் மீன்வளம் சார்ந்த பல்வேறு பயிற்சி வகுப்புகள் வழங்கி வருகின்றன.
கலெக்டர் திரு. இளம்பகவத் அவர்கள் தெரிவித்ததாவது “இந்த சிறப்பு மாற்று வாழ்வாதாரத் திட்டத்தின் முதல் கட்டமாக கடந்த அக்டோபர் மாதத்தில் 330 மீனவர் மற்றும் மீனவ மகளிர்களுக்கு திரேஸ்புரம், புதியதுறைமுகம், வெள்ளப்பட்டி, தருவைகுளம், கீழவைப்பார், புன்னக்காயல், சிங்கித்துறை, அமலிநகர் மற்றும் பெரியதாழை ஆகிய மீனவ கிராமங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தற்போதைய இரண்டாம் கட்டத்தில் 150 பேருக்கு இரட்சண்யபுரம், வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம் ஆகிய கிராமங்களில் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன,” என்றார்.
இந்தப் பயிற்சிகள் மீனவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. விரைவில் புதியதுறைமுகம், புன்னக்காயல், மணப்பாடு, தருவைகுளம், திரேஸ்புரம், கொம்புத்துறை போன்ற பகுதிகளிலும் பயிற்சிகள் தொடங்கப்பட உள்ளன.
இந்தப் பயிற்சியின் மூலம் பலரும் தனிநபராகவும், குழுக்களாகவும் இணைந்து மதிப்புகூட்டப்பட்ட மீன் உணவுப் பொருட்கள் தயாரிப்பு, கடற்பாசி வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் மீன்பிடி சார்ந்த பதப்படுத்தும் நிறுவனங்களிலும் பணிபுரிந்து நிலையான வருமானத்தை பெற்று வருகின்றனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட மீனவர் மற்றும் மீனவ மகளிர்கள் பயனடைவார்கள் என கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.