தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டில் தெப்பக்குளம் அருகில் பொதுமக்கள் ஈமச் சடங்கு செய்வதற்காக நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த பொது கிணறு, சமீபத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் மூடப்பட்டது.
இக்கிணற்றை மூடியதற்கு மாற்றாக, வரதராஜபுரம் பகுதியில் உள்ள சைவ வேளாளர் திருமண மண்டபம் மற்றும் ராசி திருமண மண்டபம் அருகில் புதிய கிணறு அமைக்க மாநகராட்சி முயற்சி எடுத்தது. எனினும் அந்த முயற்சியும் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஈமச் சடங்கிற்கான நீர் எடுப்பதில் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, மாநகராட்சி நிர்வாகம் தெப்பக்குளம் அருகிலுள்ள பழைய கிணற்றை மீண்டும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மண்டலத் தலைவர் ராஜேஷ் கனி மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.
இம்மனு வழங்கும் நிகழ்வில், ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு, மாவட்ட செயலாளர் உஷா தேவி, மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவர் லதா, கிழக்கு மண்டல பொதுச் செயலாளர் சண்முக சுந்தரம், லட்சுமி வேல்கனி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மக்களின் அடிப்படை தேவையை முன்னிறுத்தி மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இதில் வலியுறுத்தப்பட்டது.