தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது:
“1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, தேர்தல் ஆணையத்தால் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.
ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை முகவர்கள் (BLA-2) மூலமாக அதிகபட்சம் 50 வரை பெற்றுவந்து வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால், அரசியல் கட்சிகள் மூலம் முறைகேடுகள் நடைபெறும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, வீடு வீடாகச் சென்று வழங்கப்படும் வாக்காளர் விபரப் படிவங்கள், சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலர்களால் (BLO) மட்டுமே நேரடியாகப் பெறப்பட வேண்டும். இதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
மனு அளித்த பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் உட்பட அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.