வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினர் ஒவ்வொருவரும் விழிப்புணர்வோடு செயல்பட்டு, தங்களது வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம், எட்டையாபுரம் சாலையில் அமைந்துள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தலைமை வகித்தார். மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ரவீந்திரன், சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், மேகநாதன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ஆபிரகாம், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்பஅணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், பிரபு, அருணாதேவி, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, இளைஞரணி துணை அமைப்பாளர் ரவி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி, அல்பட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், வட்டச் செயலாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பல்வேறு அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது “ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடைமுறையின் (SIR) அடிப்படையில், முந்தைய வாக்காளர் தகவல்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, ஒவ்வொரு வாக்காளரும் புதிய படிவத்தை நிரப்பி சமர்ப்பித்தால்தான் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் சிறப்பு தீவிர திருத்த முகாமில், பாக அலுவலர்கள் (PLO) வீடு வீடாகச் சென்று அரசு வழங்கும் படிவங்களை வழங்குவார்கள். அந்தப் படிவங்களில் கடந்த 2024 எம்.பி. தேர்தலில் வாக்களித்த பாகத்தின் பெயர், முகவரி, புகைப்படம் ஆகிய விவரங்கள் அச்சிடப்பட்டிருக்கும். அதனைப் பெற்று, தற்போது உள்ள புகைப்படத்தையும் ஆதார் அட்டையின் நகலையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், 2026 ஜனவரி 1 அன்று 18 வயது நிறைவடையும் இளைஞர்கள் புதிய வாக்காளர்களாக சேரும் வகையில் தனித்தனி படிவங்கள் வழங்கப்படும். இதை அலட்சியமாக விடாமல், ஒவ்வொருவரும் நேரத்தில் பதிவு செய்தால்தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும்.
எனவே, திமுகவினர் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, ஒவ்வொரு வாக்கும் பதிவு செய்யப்படும் வகையில் உறுதியாக பணியாற்ற வேண்டும்,” என்று அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சி முழுவதும் உற்சாகமாக நடைபெற்றது. பாக முகவர்கள், வட்டச் செயலாளர்கள், திமுகவின் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.