தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் என். பொய்யசாமி விளையாட்டு திடலில் மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு, 115 அணிகள் பங்கேற்கும் 2025–26 கிரிக்கெட் கோப்பை திருவிழா வெகு சிறப்பாக தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் அவர்கள் வெண்புறாக்களை பறக்கவிட்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் கூறியதாவது:
“தமிழக அரசு விளையாட்டு துறையில் உள்ள அனைவரையும் சாதனையாளர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன், விதிமுறைகளுக்குட்பட்டு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டு துறையை பொறுப்பேற்றதிலிருந்து மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டிகள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாக தமிழக வீரர்கள் மாநில, தேசிய மற்றும் உலகளவிலும் பெரும் சாதனைகள் படைத்து வருகின்றனர்,” என்றார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
“இந்த கிரிக்கெட் திருவிழா மாநில திமுக இளைஞர் அணி, மாவட்ட மற்றும் மாநகர இளைஞர் அணிகள் இணைந்து நடத்தும் விழாவாகும். 40 நாட்கள் நீடிக்கும் இப்போட்டிகள் லீக் முறையில் பகுதி வாரியாக நடைபெறும்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு கோப்பையுடன் பணப்பரிசு வழங்கப்படும். பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் மற்றும் ஊக்கப் பரிசுகளும் வழங்கப்படும். இளைஞர்கள் விளையாட்டின் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சமூக ஒற்றுமையையும் உடல் நலத்தையும் மேம்படுத்துகிறார்கள்.
இவ்விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த அனைத்து இளைஞர் அணி தம்பிமார்களையும் மனமார பாராட்டுகிறேன்,” என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மகளிர் அணி கலா, வட்ட பிரதிநிதி பாஸ்கர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் ராஜா பொய்யசாமி, நிர்மல் குமார், ராமசந்திரன், சூர்யகாந்த், பகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சுரேஷ்குமார், மற்றும் பல கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.