தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையேற்றார். நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி முன்னிலை வகித்தார்.
முகாமில் பேசுகையில் மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள், “தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் அடிப்படையில், கடந்த 20 மாதங்களாக மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், புதிய குடிநீர் இணைப்புகள், பாதாள சாக்கடை, சாலைகள், கால்வாய்கள், மின்விளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் முன்னுரிமையுடன் தீர்க்கப்படுகின்றன” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “நான்கு மண்டலங்களிலும் வாரந்தோறும் ஒரு நாள் மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு தீர்வு அளிக்கிறோம். மாதந்தோறும் மாநகராட்சியில் கூட்டங்கள் நடத்தி தீர்வு காணப்படுகிறது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மாநகராட்சியுடன் தொடர்புடைய மொத்தம் 1,210 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 1,118 மனுக்களுக்கு இதுவரை தீர்வு வழங்கப்பட்டுள்ளது. தெற்கு மண்டலத்தில் மட்டும் 651 மனுக்கள் பெறப்பட்டு, 559 தீர்க்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 92 மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்,” என தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தபடி, “மாநகராட்சியில் மொத்தம் 964 சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. அதில் 400 சாலைகள் முடிவடைந்துள்ளன. மழைக்காலம் காரணமாக மீதமுள்ள சாலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை முடிந்தவுடன் அவற்றும் தொடங்கப்படும். மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தனியார் காலி இடங்களில் தேங்கியுள்ள நீருக்கு கொசு மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன,” எனவும் கூறினார்.
மேலும், “தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. 40 வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும் விரைவில் முடிக்கப்படும். ஒவ்வொரு 3 வார்டுகளுக்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெறுகிறது. நகரின் சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. மழைநீர் குறித்து மக்கள் கவலைப்பட வேண்டாம்; அதற்கேற்றவாறு பணிகள் நடைபெறுகின்றன,” என அவர் உறுதியளித்தார்.
இறுதியாக, “மக்களுடன் ஸ்டாலின், உங்களுடன் மாநகராட்சி செயல்படுகிறது. மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும்,” என மேயர் ஜெகன் பெரியசாமி வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை ஆணையாளர் சரவணக்குமார், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், இளநிலை பொறியாளர்கள் செல்வம், லெலின், துணை பொறியாளர்கள் துர்காதேவி, பாக்கியலட்சுமி, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், நிர்வாக அலுவலர்கள் சிவப்ரிதா, கலோரி, அழகுலட்சுமி, விக்னேஷ்வரன், சரவணக்குமார், மாரி, சத்யா, சிவராம், மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், பட்சிராஜ், வெற்றிசெல்வன், ராஜேந்திரன், முத்துவேல், வைதேகி, ராஜதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், பிரசாந்த், வசந்தி, பால்பாண்டி, பகுதிச் செயலாளர் மேகநாதன், ஆதிதூதர் தேவாலய பங்குதந்தை வில்லியம், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.