தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சி.வ. அரசு பள்ளி தற்போது குளம் போல் மாறி, கல்வி வளாகமே மழைநீரில் மூழ்கி தவிக்கும் நிலையில் உள்ளது. இப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர். இதே வளாகத்தில்தான் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளிட்ட பல கல்வித் துறை அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும் போதும் இவ்வளாகம் முழுவதும் நீர் தேங்குவது வழக்கமாகி விட்டது. கடந்த வாரம் தூத்துக்குடியில் பெய்த கனமழையால், இம்முறை நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. சி.வ. அரசு பள்ளி வளாகம், கல்வி அலுவலகங்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியுள்ளன. அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் நீர் நிறைந்த வளாகத்தில் சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
இக்கட்டிடம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் பொதுப்பணித்துறையின் பொறுப்பில் தான் உள்ளது. ஆனால் மழைநீரை அகற்ற வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் கோரியபோது, “நீங்களே உங்கள் செலவில் நீரை அகற்றிக் கொள்ளுங்கள்” என்று பொறுப்பற்ற பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டு தோறும் பராமரிப்பு பணிக்காக பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்தும், துறையின் அலட்சியத்தால் பள்ளி வளாகம் சுகாதார ஆபத்துக்குள்ளாகியுள்ளது. தேங்கியுள்ள நீர் கொசு மற்றும் தொற்றுநோய்களை பரப்பும் அபாயத்தை ஏற்படுத்தி வருவதாகவும் ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த நிலை குறித்து ஆசிரியர்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்களிடம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேயர் நேரில் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு, மின்மோட்டார் அமைத்து மழைநீரை அகற்றும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இந்நிலையில், 1960 ஆம் ஆண்டு வரை சி.வ. அரசு பள்ளி நகராட்சி கட்டுப்பாட்டில் இருந்தது என்பதற்கான கல்வெட்டு இன்றும் வளாகத்தில் காணப்படுகிறது. எனவே, இப்பள்ளியை மீண்டும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.